இந்தியா

இறந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடிய கணவர்

Published On 2023-12-02 03:55 GMT   |   Update On 2023-12-02 03:55 GMT
  • சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார்.
  • மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

பெங்களுரு:

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சந்திரசேகர்-சுமா ஆகியோருக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமா இறந்து விட்டார்.

இந்த நிலையில் சந்திரசேகர் தனது மனைவி போன்று மெழுகு சிலையை தயாரித்து அந்த சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அதன்படி அவரது மனைவி சுமாவின் மெழுகு சிலை தயாரிக்கப்பட்டது. இதையடுத்து உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் தனது வெள்ளி விழா திருமண ஆண்டை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தார். இதற்காக உறவினர்களை அழைத்தார்.

விழாவில் இறந்த மனைவி சுமாவின் மெழுகு சிலையை வைத்திருந்தார். மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த சிலையை பார்த்து விழாவுக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இறந்த சுமாவே நேரில் வந்து விட்டதாக கருதினர். பின்னர் தான் அது மெழுகு சிலை என்று தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

மேலும் சந்திரசேகர் தனது மனைவியின் மெழுகு சிலை அருகே நின்று கொண்டார். அவர்களுக்கு அருகில் 2 மகள்களும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். இறந்த மனைவியின் மெழுகு சிலையுடன் 25-ம் ஆண்டு திருமண விழாவை கணவர் கொண்டாடிய சம்பவம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News