கள்ளக்காதலை கைவிட அறிவுரை கூறிய விவசாயி அடித்துக்கொலை: மகன் ஆத்திரம்
- தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாக தேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியூர் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் மறைந்திருந்த நாகதேஜாவை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம், அகிரி பள்ளி மண்டலம், சோப்பரமேடுவை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது 47). இவரது மகன் நாக தேஜா.
சீனிவாசராவுக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சீனிவாசராவ் மகனுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் நாகதேஜாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சீனிவாசராவ் கள்ளத்தொடர்பை கைவிட்டு வாழ வேண்டும் என அறிவுரை கூறினார்.
ஆனாலும் தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாக தேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார். சீனிவாச ராவ் மகனுக்கு அடிக்கடி அறிவுரை கூறியதால் ஆத்திரம் அடைந்தார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள தந்தையை கொலை செய்ய நாக தேஜா முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு இது சம்பந்தமாக தந்தை மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாக தேஜா அருகில் இருந்த செங்கல்லை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கினார். தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் மயங்கி கீழே விழுந்த சீனிவாசராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தந்தை இறந்ததை அறிந்த நாகதேஜா அங்கிருந்து தப்பி ஓடினார்.
அருகில் இருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அகிரி பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசராவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியூர் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் மறைந்திருந்த நாகதேஜாவை கைது செய்தனர்.