இந்தியா

ஆந்திராவில் உடல் முழுவதும் கத்தியால் குத்தி இளம்பெண் கொலை

Published On 2023-05-05 05:03 GMT   |   Update On 2023-05-05 05:03 GMT
  • மாதவிக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாதவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாயுடுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பதி;

ஆந்திர மாநிலம், சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது மனைவி மாதவி (வயது 27) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஜா (6), சிவா (5) என ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.

மாதவிக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மாதவி நாயுடுபேட்டை போலீசில் கணவர் மீது புகார் தெரிவித்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மாதவி தன்னுடைய மகன் சிவாவை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் ஹரிஷ் தனது பண்ணை வீட்டை விற்றுவிட்டு சூளூர்பேட்டை என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.

மேலும் சூலூர்பேட்டை அடுத்த ஸ்ரீராமுடியில் உள்ள வீட்டையும் ஹரிஷ் விற்க போவதாக மாதவிக்கு தகவல் கிடைத்தது.

வீட்டை விற்பதை தடுப்பதற்காக மாதவி நேற்று சூலூர்பேட்டையில் கணவர் தங்கி உள்ள வீட்டிற்கு வந்தார்.

நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த ஹரிஷுக்கும் மாதவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஹரிஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மாதவியின் கழுத்தை அறுத்தார். உடல் முழுவதும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாதவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனைக் கண்ட மகன் சிவா அலறி கூச்சலிட்டான். தன் கண்முன்னே தாய் இறந்ததை கண்டு சிறுவன் துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாதவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாயுடுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஹரிஷ் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News