உ.பியின் சம்பாலில் குளிர்சாதன குடோனின் கூரை இடிந்து விழுந்து விபத்து- 8 பேர் பலி
- இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை அதிகாரிகள் மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடி வருவதாக தெரிவித்தனர்.
- விபத்து தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும் தகவல்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், சம்பலின் சந்தௌசி பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு குளிர்சாதன கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களை அதிகாரிகள் மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடி வருவதாக தெரிவித்தனர்.
மேலும் கிடங்கின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் சம்பல் சக்ரேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.
விபத்து தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும் தெரிவித்தனர். இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னரே கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான உண்மையான காரணத்தை கூற முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.