ஆந்திராவில் ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்த 3000 வாத்துகள் பலி
- ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.
- ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த கப்ப கூடகம் பகுதியை சேர்ந்தவர் முனி ராஜா. இவர் 3 ஆயிரம் வாத்துக்களை வளர்த்து வந்தார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3 ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.
அப்போது ஏரியில் இருந்த தண்ணீரை குடித்த 3 ஆயிரம் வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.
ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்த வாத்துக்கள் இறந்தது தெரிய வந்தது.
தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.