இந்தியா

டெல்லியில் பரபரப்பு சம்பவம்- பலாத்காரம் செய்த வாலிபரின் தாயை துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுமி

Published On 2023-01-08 04:22 GMT   |   Update On 2023-01-08 04:22 GMT
  • கடந்த 2021-ம் ஆண்டு சிறுமியை, மளிகை கடை நடத்தி வந்த பெண்ணின் மகனான 25 வயது வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார்.
  • பாலாத்கார வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்திருந்தனர்.

புதுடெல்லி:

டெல்லியில் பஜன்புரா பகுதியில் 50 வயது பெண் ஒருவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை அவரது கடைக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மளிகை கடை நடத்தி வந்த பெண்ணை சுட்டார். இதில் அந்த பெண் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அந்த சிறுமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை கமிஷனர் (வட கிழக்கு) சஞ்சய் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுமியை கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடந்த 2021-ம் ஆண்டு இந்த சிறுமியை, மளிகை கடை நடத்தி வந்த பெண்ணின் மகனான 25 வயது வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்தநிலையில் தான் சிறுமி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் தாயை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.

சிறுமியிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News