இந்தியா

கைதான விஷ்ணு, ஸ்வீட்டியை படத்தில் காணலாம்.

இன்ஸ்டாகிராமில் பழகிய பள்ளி மாணவியை கணவர் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்து விற்று சம்பாதித்த பெண்

Published On 2023-08-03 05:10 GMT   |   Update On 2023-08-03 06:39 GMT
  • வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் சிலருக்கு விற்பனை செய்துள்ளனர்.
  • ஒரு போட்டோவை 500 ரூபாய்க்கும், வீடியோவை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் குளத்துப்புழா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது31). இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமானார்.

இதையடுத்து அந்த சிறுமியுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். இருவரும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வது, பேசுவது என்று தங்களது நட்பை தொடர்ந்த படி இருந்துள்ளனர். இந்த நிலையில் செங்கன்னூரை சேர்ந்த ஸ்வீட்டி(20) என்ற பெண்ணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஷ்ணு திருமணம் செய்தார்.

அவருடன் குடும்பம் நடத்திவந்த நிலையில், அந்த மாணவியுடனும் பழகி வந்திருக்கிறார். அந்த பழக்கத்தின் அடிப்படையில், தனது மனைவி டியூசன் எடுப்பதாக கூறி தனது வீட்டுக்கு மாணவியை வரவழைத்திருக்கிறார். அதன்பேரில் விஷ்ணுவின் வீட்டுக்கு மாணவி சென்றிருக்கிறார்.

அப்போது ஆசை வார்த்தை கூறி மாணவியை விஷ்ணு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் மாணவியை பலாத்காரம் செய்வதை, அவரது மனைவி ஸ்வீட்டி ரகசியமாக செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் சிலருக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு போட்டோவை 500 ரூபாய்க்கும், வீடியோவை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியிருக்கின்றனர்.

அதில் இருந்தே மாணவியின் வீடியோ மற்றும் புகைப்படத்தை பலருக்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளனர். இந்நிலையில் தனது வீடியோ மற்றும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் விஷ்ணு மற்றும் அவரது மனைவி விற்றதை அந்த மாணவி அறிந்தார். இது பற்றி தனது தோழியிடம் தெரிவித்தார். அவர் மாணவி படித்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு அதுபற்றி தகவல் கொடுத்தார். அவர்கள் சைல்டுலைன் அதிகாரிகளுக்கு கூறியதால், பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் வெளியே வந்தது. இதனால் விஷ்ணு மற்றும் அவரது மனைவி ஸ்வீட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

இந்தநிலையில் அவர்கள் மீது எஸ்.சி.எஸ்.டி. சட்டப்படியும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மாணவியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை விலை கொடுத்து வாங்கியவர்களை கண்டு பிடித்து, அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News