இந்தியா

காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2024-12-23 12:38 IST   |   Update On 2024-12-23 12:38:00 IST
  • நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
  • காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களை கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம்.

புதுடெல்லி:

மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நிறைவடையவில்லை.

பல இடங்கள் இன்னும் காலியாக உள்ளது. இதையடுத்து கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என லக்னோ மருத்துவ கல்லூரி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடைசி சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகு காலி இடங்கள் இருந்தால் சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அவர்கள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:

நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாணவர்கள் சேர்க்கையை முழுமையாக நடத்தாமல் இருப்பது தவறு.

இதனால் இந்த மாதம் 30-ந்தேதிக்குள் மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை காலி இடங்கள் இருக்கிறதோ, அவற்றை உடனே நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் என்ன பிரச்சனை இருந்தாலும் அதனை தீர்த்து சிறப்பு நீட் கவுன்சிலிங் நடத்தி அனைத்து மாணவர்கள் சேர்க்கை நடவடிக்கையும் முடிக்க வேண்டும். காலியாக உள்ள என்.ஆர்.ஐ. இடங்களை கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News