இந்தியா

திரவுபதி முர்முவின் கண்கவர் மணல் சிற்பத்தை உருவாக்கி வாழ்த்திய சுதர்சன் பட்நாயக்

Published On 2022-07-23 02:39 GMT   |   Update On 2022-07-23 02:39 GMT
  • ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.
  • திரவுபதி முர்மு ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார்.

புவனேஷ்வர் :

இந்தியாவின் உயரிய ஜனாதிபதி பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத் கோவிந்த். 14-வது ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு அபார வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். இதனையடுத்து, பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் கண்கவர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி நகரின் கடற்கரையில் திரவுபதி முர்முவின் மணல் சிற்பத்தை உருவாக்கினார். இதனை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர்,'இந்திய மக்களின் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜி அவர்களது வரலாற்று வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கணிசமான எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 64 வயதான முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும், கிட்டத்தட்ட125 எம்.எல்.ஏக்கள் மற்றும் 17 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆகியோரும் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களித்தனர் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News