குப்பைத் தொட்டியில் கிடந்த பங்குச் சான்றிதழ்கள்.. பேரனுக்கு அடித்த ரூ.2.5 கோடி ஜாக்பாட் - குறுக்கே வந்த தந்தை
- தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.
- தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன.
குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா கிராமத்தைச் சேர்ந்த சவ்ஜி படேல், டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக பணியாற்றினார்.
சவ்ஜி படேலின் தந்தைக்கு அவரது சொந்த கிராமத்தில் ஒரு வீடு இருந்தது. வயதான காலத்தில் தனது சொந்த கிராமத்திற்குச் சென்ற சவ்ஜி படேல், தனது கடைசி நாட்களை அங்கேயே கழித்த அவர் சமீபத்தில் இறந்தார்.
இறப்பதற்கு முன்பு தனது பேரன் தனது சொத்திற்கு வாரிசாக இருப்பார் என்று ஒரு உயில் எழுதியிருந்தார்.
சவ்ஜி படேலின் மகனும் டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிகிறார். இந்த சூழலில், சவ்ஜி படேலின் பேரன் சமீபத்தில் உனா கிராமத்திற்குச் சென்றார்.
தனது தாத்தாவின் வீட்டை சுத்தம் செய்யும் போது, குப்பைத் தொட்டியில் பங்குச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆன்லைனில் சரிபார்த்தபோது, அவற்றின் மதிப்பு ரூ. 2.5 கோடி என தெரியவரவே உற்சாகத்தில் மூழ்கினார்.
ஆனால் இதை அறிந்த இளைஞனின் தந்தையும் தனது தந்தையின் பங்கில் தனக்கு தான் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
தனது தாத்தா முழு சொத்தையும் தனக்கு உயில் எழுதிக் கொடுத்ததால், இந்தப் பங்குகளும் தன்னுடையவை என்று பேரன் வாதிட்டார்.
பங்குகளின் உரிமைக்காக தந்தை மற்றும் மகன் இருவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது.