இந்தியா

டீஸ்டா செதல்வாட்

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு - டீஸ்டா செதல்வாட்டுக்கு இடைக்கால ஜாமீன்

Published On 2022-09-02 11:55 GMT   |   Update On 2022-09-02 12:34 GMT
  • குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
  • போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி:

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே, குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களைக் கைதுசெய்ய போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறி முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் ஜூன் 25-ம் தேதி கைது செய்தனர்.

டீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை.

இந்நிலையில், டீஸ்டா செதல்வாட் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீது பதிலளிக்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. இந்த வழக்கில் ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டுக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

மேலும், நிலுவையில் உள்ள விசாரணையில் டீஸ்டா செதல்வாட் முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்றும், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News