இந்தியா

அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Published On 2023-02-04 02:03 GMT   |   Update On 2023-02-04 02:03 GMT
  • பங்குகளின் அடிப்படையில் எந்த கடனும் வழங்கவில்லை.
  • அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை.

மும்பை :

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான அதானியின் பல்வேறு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், கணக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் சரிந்தது. எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால் இந்த வீழ்ச்சி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.

இந்த நிலையில் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அதானி குழுமத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே. இது வங்கியின் கடன் புத்தகத்தில் வெறும் 0.88 சதவீதம் ஆகும்.

பங்குகளின் அடிப்படையில் அதானி குழுமத்துக்கு எந்த கடனும் வழங்கவில்லை.

கடன் வழங்குவதற்கான உறுதியான சொத்துகள் மற்றும் போதுமான பணப்புழக்கங்களை அதானி குழும திட்டங்கள் கொண்டுள்ளன. அத்துடன் கடனை திருப்பி செலுத்துவதில் சிறந்த வரலாறும் இந்த குழுமத்துக்கு உண்டு.

இதைப்போல இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காக அதானி குழுமத்திடம் இருந்து எந்தவித மறுநிதி கோரிக்கைகளும் வரவில்லை.

இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி தலைவர் தினேஷ் கரா தெரிவித்தார்.

இதற்கிடையே அதானி குழுமத்துக்கு தாங்கள் வழங்கிய கடன் பாதுகாப்பாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி (ஜே.கே.வங்கி) தெரிவித்து உள்ளது.

இது குறித்து வங்கியின் துணை பொதுமேலாளர் நிஷிகாந்த் சர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், 'அதானி குழுமத்துக்கான எங்கள் கடன்கள் ஜே.கே. வங்கியால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் சொத்துகளுக்கு மேல் பாதுகாக்கப்படுகின்றன' என தெரிவித்தார்.

மேலும் அவர், 'அதானி குழுமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 மின் திட்டங்களுக்காக ரூ.400 கோடி கடன் வழங்கப்பட்டது. தற்போது அது சுமார் ரூ.250 கோடியாக உள்ளது. கடனுக்கான பணத்தை திருப்பி செலுத்துவது ஒழுங்காக நடைபெறுவதுடன், 2 மின் திட்டங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களுடன் செயல்படுகின்றன. அதானி குழுமத்தின் கணக்கில் ஒரு பைசா கூட பாக்கி இல்லை' என்றும் கூறினார்.

Tags:    

Similar News