இந்தியா

நடிகர் மாதவன்

ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துக் காட்டும்- நடிகர் மாதவன்

Published On 2022-06-27 18:32 GMT   |   Update On 2022-06-27 18:32 GMT
  • மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு காட்சி டெல்லியில் திரையிடப்பட்டது.
  • விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுகிறது.

மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள , ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தை இயக்கியுள்ள நடிகர் மாதவன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி டெல்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலர் அபூர்வ சந்திரா, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், முன்னாள் ஐஜி பி.எம்.நாயர், மூத்த அதிகாரிகள் மற்றும் ராக்கெட்ரி திரைப்படக் குழுவினர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன், விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆளுமையை போற்றும் படமாக இது இருக்கும் என்றார். விகாஸ் எஞ்சினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அறிவியல் வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் திறமை குறித்து உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்தப் படம் அமையும் என்றும் அவர் கூறினார். ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News