இந்தியா

ரஷியா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

Published On 2024-07-11 08:42 IST   |   Update On 2024-07-11 08:42:00 IST
  • தலைநகர் வியன்னாவில் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • நேற்று இரு தலைவர்களும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

புதுடெல்லி:

பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி முதல் ரஷியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதில் ரஷிய பயணத்தை நேற்று முன்தினம் முடித்துக்கொண்ட அவர், மாலையில் ஆஸ்திரியா சென்றார். மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். கடைசியாக கடந்த 1983-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்றிருந்தார்.

தலைநகர் வியன்னாவில் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வாழும் இந்தியர்களும் திரளாக வந்து பிரதமரை வரவேற்றனர். பின்னர் அங்குள்ள பிரதமர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளித்து கவுரவிக்கப்பட்டது.

பின்னர் அந்த நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்தார். அப்போது மோடியை நெகம்மர் கட்டித்தழுவி வரவேற்றார். அத்துடன் பிரதமர் மோடியுடன் செல்பி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று இரு தலைவர்களும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு புவிசார் அரசியல் சவால்களில் இருதரப்பு உறவையும், நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் ஆழமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ரஷியா மற்றும் ஆஸ்திரியா இரு நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று டெல்லி வந்தடைந்தார்.

Tags:    

Similar News