இந்தியா

'பாபர்', 'பாபர் மசூதி' பெயரில் மசூதிகள் கட்ட தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

Published On 2026-02-20 17:36 IST   |   Update On 2026-02-20 17:36:00 IST
  • பாபர் ஒரு 'படையெடுப்பாளர்'
  • ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல்

முகலாயப் பேரரசரான பாபரின் பெயரிலோ அல்லது பாபர் மசூதி என்ற பெயரிலோ மசூதிகள் கட்டுவதற்கு அல்லது மசூதிகளுக்கு பெயரிடுவதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பாபர் ஒரு 'படையெடுப்பாளர்' என்றும், அவர் இந்துக்களை அடிமைகள் என்றும் குறிப்பிட்டதாகவும், அவர் பெயரில் மசூதிகள் கட்டுவது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. விசாரணைக்கு நீதிபதிகள் மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் இந்த மனு 'திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி' செய்யப்பட்டது.

Tags:    

Similar News