கடந்த ஆண்டு வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ரூ.8 லட்சம் கோடி அனுப்பினர்: நிர்மலா சீதாராமன்
- வெளிநாட்டுவாழ் இந்தியர்கள்தான், இந்தியாவின் உண்மையான தூதர்கள்.
- 2021-ம் ஆண்டு அனுப்பியதை விட 12 சதவீதம் அதிகம்.
இந்தூர் :
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாடு நடந்து வருகிறது. நேற்று அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:-
வெளிநாட்டுவாழ் இந்தியர்கள்தான், இந்தியாவின் உண்மையான தூதர்கள். அவர்கள் கூடுமானவரை இந்திய தயாரிப்புகளையும், சேவைகளையுமே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், இந்திய தயாரிப்பு உலகம் முழுவதும் பிரபலம் அடையும்.
இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. அவை சீனாவிலும், ஐரோப்பிய யூனியனிலும் அமைத்ததுபோல், இங்கும் அமைக்க வேண்டும்.
வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், இந்தியாவின் சிறிய, பெரிய தொழில் அதிபர்களுடன் பங்குதாரர்களாக சேர வேண்டும். அப்போதுதான், அவர்களின் தொழில் திறனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கொரோனாவுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பிய வெளிநாட்டுவாழ் இந்தியர்கள், மீண்டும் திரும்பி செல்ல மாட்டார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு சென்றதுடன், நல்ல வேலைகளிலும் அமர்ந்தனர்.
அதன்மூலம் இந்தியாவுக்கு அதிக அளவில் பணம் அனுப்பி வைத்தனர். கடந்த ஆண்டு அவர்கள் 100 பில்லியன் டாலரை (ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் கோடி) அனுப்பி வைத்தனர். இது, 2021-ம் ஆண்டு அனுப்பியதை விட 12 சதவீதம் அதிகம்.
தகவல் தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம் போன்றவற்றில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், இந்தியா உலகின் அறிவுசார்மையமாக ஆகி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினர்.