இந்தியா

4 குழந்தைகளின் தாய் கொலை: 2-வது கணவனை தேடும் டெல்லி காவல்துறை

Published On 2023-09-18 16:37 IST   |   Update On 2023-09-18 16:37:00 IST
  • ஒரு மகள் மட்டும் தாயின் பொறுப்பில் வளர்ந்து வந்தார்
  • காவல்துறையினர் விசாரிக்க வந்த போது ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது

இந்திய தலைநகர் புது டெல்லியின் வடகிழக்கில் உள்ளது கஜூரி காஸ் பகுதி.

இங்கு வசித்து வந்த திரவுபதி (35) என்பவருக்கு ஜோதிஷ் யாதவ் என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாட்டால் திரவுபதியும், அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்தனர். நான்கு குழந்தைகளில் 3 பேரை, கணவர் ஜோதிஷ் தன்னுடன் பீகாரில் வளர்த்து வந்தார். இத்தம்பதியினரின் ஒரு 15-வயது மகளை மட்டும் திரவுபதி தன் பொறுப்பில் வளர்ந்து வந்தார்.

முதல் கணவரை பிரிந்த திரவுபதி, சுனில் என்பவருடன் வாழ்ந்து வந்தார். சுனில் கட்டிட பணியாளராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களாக திரவுபதிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சுனில் சந்தேகித்ததால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், திரவுபதி காணாமல் போனதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இரு தினங்களுக்கு முன் தகவல் வந்தது.

கடைசியாக அவரது மகள் அவரை இரு தினங்களுக்கு முன் கண்டதாகவும் அதற்கு பிறகு அவர் காணவில்லையென்றும் விசாரனையில் தெரிய வந்ததால் காவல்துறையினர் வீட்டை சோதனையிட வந்தனர். அப்போது ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் காவல்துறையினர் அந்த அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு கட்டிலுக்கு கீழே நெற்றியில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்த திரவுபதியின் சடலத்தையும், அவரது கழுத்தை சுற்றி துப்பட்டா ஒன்று இறுக்கப்பட்டிருப்பதையும் காவல்துறையினர் கண்டனர். அறை முழுவதும் ரத்தக் கறை காணப்பட்டது.

கொலை வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், காணாமல் போன சுனிலை தேடி வருகின்றனர்.

அனைத்து கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டிருப்பதாக புது டெல்லி வடகிழக்கு காவல்துறை துணை ஆணையர் ஜாய் டர்கி தெரிவித்தார்.

Tags:    

Similar News