பாரதியாரின் உறவினர்களுடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திப்பு
- காசி தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கி வைத்தார்.
- நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்று வாரணாசி சென்றார்.
புதுடெல்லி :
தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள பழங்கால தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் விழா நடந்து வருகிறது. இந்த விழாவை பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்கள் காசிக்கு சென்று அங்குள்ள புண்ணிய தலங்களை தரிசித்து வருகிறார்கள். இதற்காக சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்று வாரணாசி சென்றார்.
வாரணாசியில் தமிழ் மொழி முக்கியத்துவம் பெற்றிருக்கும் பகுதிகளான விசாலாட்சி கோவில், குமாரசாமி மடம், காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம், சக்கரலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சிவமடம் போன்ற இடங்களுக்கு சென்றார்.
மேலும் அனுமான் காட் பகுதியிலுள்ள பகுதியில் வசிக்கும் பாரதியாரின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார். மேலும் பாரதியாரின் மருமகன் கே.வி.கிருஷ்ணன் (வயது 96) காலில் விழுந்து அவர் ஆசி பெற்றார்.
இதன்பின்னர் மாலை 6 மணிக்கு கங்கை நதிக்கரையில் தமிழ் சங்கமம் விழாவையொட்டி ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. இதிலும் அவர் பங்கேற்றார்.
2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 'கட்டிடக்கலை மற்றும் பிற பாரம்பரிய வடிவங்கள்' (இந்திய அறிவு அமைப்பு) என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.
மேலும் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியில் மாணவர்களுடன் உரையாடுகிறார். பின்னர், ஒரு கலாசார நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.