இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- பக்தர்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-10-18 10:50 IST   |   Update On 2025-10-18 10:50:00 IST
  • சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர்.
  • மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு அலிப்பிரி விநாயகர் கோவில் அருகே உள்ள கனுமா சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. நடைபாதையில் சென்ற பக்தர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாடுவதை கண்டறிந்தனர். தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளனர். மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே செல்ல வேண்டாம். குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். கூட்டம் கூட்டமாக நடைபாதையில் செல்ல வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 66,675 பேர் தரிசனம் செய்தனர். 24,681 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News