இந்தியா

பேஸ்புக் மூலம் பழகி 14 வயது சிறுமியை கடத்தி சென்ற கேரள போக்குவரத்து துறை அதிகாரி

Published On 2023-01-06 05:21 GMT   |   Update On 2023-01-06 05:21 GMT
  • போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
  • சிறுமியும், பிரகாசும் எர்ணாகுளம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது.

திருவனந்தபுரம்:

களியக்காவிளையை அடுத்த கேரள எல்லையான பாறசாலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். (வயது 55). இவர் கேரள அரசு போக்குவரத்து துறையில், பாறசாலை பகுதியில் மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் சமூக வலைதளத்தில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

மேலும் பேஸ்புக்கிலும் பலருடன் தொடர்பில் இருந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த சிறுமியுடன் அடிக்கடி பேச தொடங்கிய பிரகாஷ், பின்னர் அவரை சந்திக்கவும் தொடங்கினார். இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி அந்த சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பிரகாஷ் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இதில் சிறுமியும், பிரகாசும் எர்ணாகுளம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது.

போலீசார் அவர்களை கண்டுபிடித்தனர். பிரகாசை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 14 வயது சிறுமியை 55 வயது அரசு ஊழியர் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News