இந்தியா

காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2022-11-18 02:48 GMT   |   Update On 2022-11-18 02:48 GMT
  • ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது.
  • தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

வாரணாசி:

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசார தொடர்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வுடனும், தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி-தமிழ் சங்கமம் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சி, நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 16-ந் தேதிவரை ஒரு மாத காலத்துக்கு நடக்கிறது.

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான பல நூற்றாண்டு கால பழமையான நாகரீக தொடர்பை மீண்டும் உயர்ப்பிக்க இதில் கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2 ஆயிரத்து 592 பேர் பயணம் செய்கிறார்கள். முதலாவது ரெயில் நேற்று புறப்பட்டது.

இந்தநிலையில், காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) முறைப்படி தொடங்கி வைக்கிறார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் தொடக்கவிழா நடக்கிறது.

Tags:    

Similar News