பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் கைது
- பஹல்காம் தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு அவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதற்கிடையே பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாட ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த ஆயுதங்களை பகுப்பாய்வு செய்ததில், பயங்கரவாதிகளுக்கு குல்காமில் வசித்து வரும் 26 வயதான முகமது யூசுப் கட்டாரியா தடவாள உதவிகள் செய்தது தெரியவந்தது. இதனடிப்படையில் போலீசார் கட்டாரியாவை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நிலையில், 14 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். ஒப்பந்த வேலையில் பணிபுரிந்து வந்த நிலையில், உள்ளூர் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வந்த கட்டாரியா, சில மாதங்களுக்கு முன்பு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் இயக்கங்களுக்கு உதவத் தொடங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.