இந்தியா

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திரா முழுவதும் ஆகஸ்ட் 7-ந் தேதி இலவச திருமணம்

Published On 2022-06-06 12:14 IST   |   Update On 2022-06-06 12:14:00 IST
  • கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த கல்யாணமஸ்து திட்டத்தை நடப்பு ஆண்டு முதல் தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது.
  • திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள் தங்கள் விவரங்களை அருகில் உள்ள கலெக்டர் அலுவலகம் , ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்ய வேண்டும்.

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்யாண மஸ்து என்ற பெயரில் இலவச திருமணங்கள் திருமலையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வந்தன.

இந்த திருமணத்துக்காக பதிவு செய்து கொள்ளும் மணமக்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தங்க தாலி, திருமண வஸ்திரங்கள், மங்கலப் பொருள்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த கல்யாணமஸ்து திட்டத்தை நடப்பு ஆண்டு முதல் தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது.

இதற்காக சுபமுகூர்த்தங்கள் முடிவு செய்யப்பட்டு அந்த லக்ன பத்திரிகைகளை தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் திருவடியில் வைத்து பூஜைகள் செய்தனர். அதன்படி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச திருமணங்கள் நடத்தப்பட உள்ளன.

இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:-

ஏழுமலையான் ஆசீர்வாதத்துடன் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இலவச திருமணங்களை மாநிலம் முழுவதும் நடத்தி வைத்தார். அந்த திருமணங்கள் அவரின் காலத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

தற்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின், மீண்டும் நிறுத்தப்பட்ட கல்யாண மஸ்து என்கிற இலவச திருமண திட்டத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் தேவஸ்தான அறங்காவலர் குழு இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட்டு 7-ந் தேதி சுபகிருத ஆண்டு ஆடி மாதமான ஞாயிற்றுக்கிழமை காலை 8.07 மணிமுதல் 8.17 மணிக்குள் சிம்ம லக்னம் அனுராதா (அனுஷம்) நட்சத்திரத்தில் இந்த இலவச திருமணங்கள் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்று திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள் தங்கள் விவரங்களை அருகில் உள்ள கலெக்டர் அலுவலகம் , ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் இதுபோன்ற இலவச திருமணங்களை நடத்த அண்டை மாநில அரசுகளும் முன்வந்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்யாணமஸ்து திட்டத்தின் கீழ் தேவஸ்தானம் நடத்தித்தரும் என்றார்.

Tags:    

Similar News