இந்தியா

துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார்


துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார்- ஜனாதிபதி திரவுபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

Published On 2022-08-11 08:23 GMT   |   Update On 2022-08-11 08:23 GMT
  • பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.
  • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் கடந்த 6-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து ஜெகதீப் தன்கர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வானார்.

கடந்த 7-ந் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கூட்டாக புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழில் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் நேற்று பாராளுமன்ற மேல்சபை அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள மேல்சபை அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். தான் பதவி வகித்தபோது கடந்த 5 ஆண்டு காலத்தில் தன் மீது அதிகாரிகள் காட்டிய அன்பையும், அக்கறையையும் நினைவு கூர்ந்து அவர்களை பாராட்டினார்.

வெங்கையா நாயுடுவிடம் 5 ஆண்டு காலம் பணியாற்றிய அதிகாரிகள் அவருடைய பணிக்காலத்தில் நெருங்கி பழகியதை நினைவு கூர்ந்தனர். இதையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் தனது நினைவாக சீதா அசோக மரக்கன்றை வெங்கையா நாயுடு நட்டார்.

பாராளுமன்ற கட்டிடத்தின் முற்றம் அமைந்துள்ள பகுதியிலும் அசோக மரக்கன்றை அவர் நட்டார்.

இந்த நிலையில் இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் இன்று பதவி ஏற்றார்.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 11.45 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வாழ்க்கை குறிப்பு

1951-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி ராஜஸ்தானில் ஜூன்ஜூனு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் ஜெகதீப் தன்கர் பிறந்தார். சித்தோர்கர் பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்த பிறகு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. படித்தார்.

முதல் தலைமுறை தொழில் நிபுணராக இருந்த அவர் மாநிலத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

ராஜஸ்தான் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றுள்ளார். 1988-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதாதளம் கட்சி சார்பில் ஜூன் ஜூனு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது பொது வாழ்வில் நுழைந்த அவர் 1990-ம் ஆண்டு பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை மந்திரியாக பணியாற்றினார்.

ஜாட் சமூகத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர் அதன் பிறகு மாநில அரசியலில் கவனம் செலுத்தினார். 1993-ம் ஆண்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் கடந்த ஜூலை 17-ந் தேதி மேற்கு வங்காள கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இன்று துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பாராளுமன்ற மேல்சபை தலைவராகவும் இருப்பார். பாராளுமன்ற மேல்சபையை தலைமை தாங்கி நடத்துவார்.

Tags:    

Similar News