ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு - பிரதமர் மோடி கண்டனம்
- கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டார்.
- இதைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி:
ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார்.
இதற்கிடையே, ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. இச்சம்பவத்தில் பிரதமர் புமியோ கிஷிடா பத்திரமாக மீட்கப்பட்டார்.
பிரதமரை நோக்கி குண்டை வீசியதாக ஒருவரை கைதுசெய்த ஜப்பான் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பானில் உள்ள வயகமாவில் எனது நண்பர் பிரதமர் கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் வன்முறை சம்பவம் நடந்ததை அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருப்பது அறிந்து நிம்மதி அடைந்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.