ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது
- திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- கொடுங்கலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தயாலால் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைதொடர்ந்து அந்த பெண்ணை உறவினர்கள் மீட்டு கொடுங்கலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதற்காக கொடுங்கலூர் தாலுகா ஆஸ்பத்திரியில் இருந்து அவர் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார். அவருடன் கொடுங்கலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தயாலால் என்பவரும் சென்றார். ஆம்புலன்சில் சென்றபோது தயாலால், இளம்பெண் அருகே அமர்ந்து இருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றதும் அந்த பெண் இதுபற்றி டாக்டரிடம் புகார் கூறினார். அவர் திருச்சூர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொடுங்கலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தயாலால் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.