இந்தியா

ஷீனா போரா போன்ற தோற்றமுடைய பெண்: கோர்ட்டில் இந்திராணி புதிய மனு தாக்கல்

Published On 2023-01-07 03:27 GMT   |   Update On 2023-01-07 03:27 GMT
  • ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
  • இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

மும்பை :

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்திராணியின் 3-வது கணவரான பீட்டர் முகர்ஜியும் கைதானார்.

பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இவர் மீதான வழக்கை சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்தநிலையில் சிறப்பு கோர்ட்டில் இந்திராணி முகர்ஜி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஷீனா போரா போன்று தோற்றமுடைய பெண்ணை கவுகாத்தி ரெயில் நிலையத்தில் 2 வக்கீல்கள் பார்த்ததாகவும், இதை உறுதி படுத்த விமான நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து இந்திராணி முகர்ஜியின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய புலனாய்வு துறைக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

Similar News