இந்தியா

ரூ.200 கோடி பண மோசடி வழக்கு- நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமீன்

Published On 2022-09-26 06:11 GMT   |   Update On 2022-09-26 06:11 GMT
  • சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதாக குற்றச்சாட்டு
  • விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

புதுடெல்லி:

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இரானி என்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகி, போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். விசாரணையின் முடிவில் ஜாக்குலின் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜாக்குலின் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் குழு மனு தாக்கல் செய்தது. மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags:    

Similar News