அமைச்சர் அன்பில் மகேஷ் நலமாக உள்ளார் - மருத்துவமனை அறிக்கை
- உடல்நலக் குறைவால் அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி
- தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் உள்ளார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், பெங்களூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய மருத்துவஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில் நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். திரவங்கள் மற்றும் வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.