ஆகஸ்ட் 2027ல் ஓய்வு பெறுவேன் - 10 நாட்களுக்கு முன்பு ஜெகதீப் தன்கர் பேசிய வீடியோ வைரல்
- மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் ஜெகதீப் தன்கர் விலகியுள்ளார்
- குடியரசு துணைத் தலைவர் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்டார்
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் முர்மு ஏற்றுக்கொண்டார் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
இதனிடையே ஜூலை 10 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 2027ல் ஓய்வு பெறுவேன் என்று ஜெகதீப் தன்கர் பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய தன்கர், "ஆகஸ்ட் 2027ல் ஓய்வு பெறுவேன்.. தெய்வீக தலையீட்டால் இது மாறலாம்.." என்று தெரிவித்திருந்தார்.
ஓய்வு குறித்து அவர் பேசி 10 நாட்களே ஆன நிலையில் திடீரென அவர் ஓய்வு அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.