ஆந்திராவில் தொடர் கொள்ளை சம்பவம்: திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது
- கடந்த 7-ந் தேதி சித்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் கொள்ளை போனது.
- கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் சித்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் சித்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நகைக்கடைகள், வங்கிகள், மக்கள் அதிகம் கூடும் பஸ், ரெயில் நிலையங்கள், ஏ.டி.எம் மையங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி சித்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக நிதி நிறுவன அதிகாரிகள் சித்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் சித்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று அங்கு தங்கி இருந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த ஹரிஷ் (வயது 24), ஜமுனா (50) என தெரிய வந்தது.
மேலும் இவர்கள் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.