இந்தியா

நில ஆவணங்களை பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டம்- மத்திய அரசு நடவடிக்கை

Published On 2022-10-07 02:32 GMT   |   Update On 2022-10-07 02:32 GMT
  • நில ஆவணங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, மொழி.
  • இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.

புதுடெல்லி:

நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த தடைகளை பலரும் அனுபவித்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, டெல்லியை சேர்ந்த ஒருவர் கர்நாடகாவில் ஒரு சிறிய விவசாய நிலம் வாங்கினால், கன்னட மொழியில் இருக்கும் நிலப்பத்திரத்தை அவரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதைப்போல பலரும் நிலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை படிப்பதில் மொழி ஒரு தடையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அந்தவகையில் நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை (ஆர்.ஓ.ஆர்) பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த ஆர்.ஓ.ஆர். என்பது நிலத்தின் இருப்பிடம், மொத்த அளவு, நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர், ஒவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் தன்மை, நிலம் மீதான கடன், வில்லங்கம், நிலத்தின் வகைப்பாடு, வாடகை அல்லது வருவாய் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும்.

இது தொடர்பாக மத்திய நில வளங்கள்துறை இணை செயலாளர் சோன்மணி போரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நில ஆவணங்களில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, மொழி. இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. அதன் அடிப்படையில் ஆர்.ஓ.ஆர். ஆவணத்தை மொழிபெயர்க்க முயற்சிக்கிறோம்.

இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா, பீகார், குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏற்கனவே நாங்கள் சோதனை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக ஒரு சாப்ட்வேர் தயாராக உள்ளது. இதை நாங்கள் எந்த நேரத்திலும் வெளியிடுவோம்.

நில ஆவணங்களை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பது ஒரே நேரத்தில் நடக்காது. முதலில் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழி ஆகிய 3 மொழிகளிலும், 3 விருப்ப மொழிகளிலும் மொழி பெயர்க்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசுகள் தங்கள் தேவைக்கேற்ப இந்த விருப்ப மொழிகளை தேர்வு செய்யலாம்.

இது நில ஆவணங்களில் உள்ள மொழித்தடையை உடைக்கும். இந்த பல மொழி ஆர்.ஓ.ஆர்.களின் லட்சிய திட்டம் ரூ.11 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இதை ஒரு வருடத்தில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஓ.ஆர்-ன் அமைப்பு மற்றும் அது வழங்கும் தகவல்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

இவ்வாறு சோன்மணி போரா தெரிவித்தார்.

Tags:    

Similar News