இந்தியா

வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர்... சோனாலி போகத் மரண வழக்கில் வெளியான சிசிடிவி ஆதாரம்

Published On 2022-08-27 16:06 GMT   |   Update On 2022-08-27 16:06 GMT
  • சோனாலி போகத்தின் உடலில் காயங்களுக்கான அடையாளம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
  • உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதைப் பொருள் கடத்தல்காரர் கைது

புதுடெல்லி:

அரியானாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் பாஜக தலைவருமான சோனாலி போகத் (வயது 42), கடந்த 22ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார். மறுநாள் காலையில் அவர் அஞ்சுனாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாக தெரிவிக்கப்பட்டது. எனினும், சோனாலி போகத் மரணத்தில் மர்மம் இருப்பதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து, கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குடும்பத்தினர் ஒப்புதலுக்கு பின், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நடிகை சோனாலி போகத்தின் உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சோனாலியின் மரணம் மாரடைப்பால் நடக்கவில்லை. அது ஒரு கொலை என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். மேலும் சோனாலி, அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகித்து, அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.


அதன் அடிப்படையில் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்திய போலீசார், சோனாலி 22ம் தேதியன்று கர்லீஸ் இரவு விடுதியில் பார்ட்டியில் பங்கேற்றபோது அவருடன் இருந்த சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் சிங் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதைப் பொருள் கடத்தல்காரர் ஆகியோரையும் கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.

சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் சிங் இருவரும், இரவு விடுதியில் வைத்து தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் பொருளை கலந்து, சோனாலிக்கு கட்டாயப்படுத்தி கொடுத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

சோனாலி போகத் இரவு விடுதியில் இருந்து வெளியே செல்லும் வழியில் தடுமாறிக் கொண்டிருந்த வீடியோ பதிவை நேற்று போலீசார் வெளியிட்டனர். இன்று இந்த வழக்கில் புதிய ஆதாரமாக மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சோனாலி போகத் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, நடன அரங்கில் அவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைப்பதாக அந்த காட்சி அமைந்துள்ளது. வீடியோவில் உள்ள நபர், கைது செய்யப்பட்ட சுதிர் சங்வான் போன்று தெரிகிறது. ஒரு நாள் முன்பு வெளிவந்த வீடியோ பதிவில் கிளப்பில் இருந்து சோனாலி போகத் வெளியேற அவர் உதவியது தெரிந்தது.

சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரி ஆய்வு செய்ததில், சுதிர் சோனாலிக்கு தண்ணீர் பாட்டிலில் இருந்த திரவத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தது தெரியவந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News