மோட்டார் சைக்கிளை தலையில் சுமந்து சென்ற 'பாகுபலி' வாலிபர்: சமூக வலைத்தளங்களில் வைரல்
- ராய்ச்சூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
- ரெயில்வே சுரங்க சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
ராய்ச்சூர் :
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடகர்நாடக மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சாலை, சுரங்க சாலைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ராய்ச்சூரில் ரெயில்வே சுரங்க சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தலையில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
ராய்ச்சூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழை காரணமாக ராய்ச்சூர் அருகே சக்திநகர் ஆர்.டி.பி.எஸ். பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்க சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
சுரங்க சாலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதை பார்த்த அவர், எவ்வாறு கடந்து செல்லலாம் என்று யோசித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, தனது பேண்ட்டை தண்ணீர் படாதவாறு தொடை வரை மடித்தார். பின்னர் திடீரென்று தனது மோட்டார் சைக்கிளை அலேக்காக தூக்கி தலையில் வைத்து கொண்டு 'பாகுபலி' பட பாணியில் சுரங்கச்சாலையை கடந்து சென்றார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.