இந்தியா

மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ்

ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம் - மத்திய மந்திரி தகவல்

Published On 2022-12-12 10:02 GMT   |   Update On 2022-12-12 10:02 GMT
  • பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
  • மத்திய அரசு ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளது என மத்திய மந்திரி கூறினார்.

புதுடெல்லி:

மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார். ஆனால் இன்று நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 100 சதவீதம் நிதி பயனாளிகளைச் சென்றடைகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இதற்குப் பின்னால் இருந்தது.

ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது. மத்திய அரசின் நிதி தற்போது ரூ. 26 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. நேரடி பணப் பரிமாற்றத்தால் ரூ. 2.25 லட்சம் கோடியை அரசு சேமித்துள்ளது.

வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.

135 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம், அரசின் பணப் பயன் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. நாம் கோ-வின் இணைய தளம் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம்.

மத்திய அரசின் இ-வர்த்தக தளத்தில் 125 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இந்தத் தளத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு ரூ. 3.5 லட்சம் கோடிக்கு பொருட்களை வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்துள்ளது.

கடந்த 2014 முதல் 2022 வரை ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் நீக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது.

நல்லாட்சி இருந்தால்தான் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடையும். நல்லாட்சியே அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதனால் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News