இந்தியா
மழை

தென்மேற்கு பருவ மழை 103 சதவீதமாக இருக்கும்- இந்திய வானிலை மையம் தகவல்

Published On 2022-06-01 11:15 IST   |   Update On 2022-06-01 13:35:00 IST
நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந்தேதி அன்று தொடங்கும். ஆனால் 3 தினங்களுக்கு முன்னதாக கடந்த 29-ந்தேதி அன்றே கேரளாவில் பருவ மழை தொடங்கி விட்டது.

நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுசூசய் மொகபத்ரா கூறியதாவது:-

தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) சராசரி மழை பொழிவு 103 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் பருவ மழை பொழிவு 99 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது கூடுதல் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நாட்டில் இந்த ஆண்டு பருவ மழை இயல்பான அளவை ஒட்டியே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

கடந்த ஆண்டு பருவ மழை 99 சதவீதம் (இயல்பு) இருந்தது. 2020-ல் இயல்புக்கு அதிகமாக 109 சதவீதமும், 2019-ல் பருவ மழை இயல்புக்கு அதிகமாக 110 சதவீதமும் இருந்தது.

தற்போதைய பருவ மழை இந்தியாவிலும், தென் தீபகற்பத்திலும் இயல்பை விட அதிகமாக 106 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் 96 முதல் 106 சதவீதம் வரையும் இருக்கலாம்.

ஒரு நல்ல பருவ மழை அதிகமான விளைச்சலை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News