இந்தியா
பினராயி விஜயன்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கண்ணூர் வீடு அருகே குண்டு வீச்சு

Published On 2022-04-23 04:44 GMT   |   Update On 2022-04-23 04:44 GMT
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் கண்ணூர் வீடு அருகே 2 வெடி குண்டுகள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊர் கண்ணூர் மாவட்டம் பினராயில் உள்ளது.

இவரது வீடு அருகே உள்ள இன்னொரு வீட்டில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி புன்னோஸ் ஹரிதாசன் கொலை வழக்கில் போலீசார் தேடும் குற்றவாளி நிகில்தாஸ் மறைந்திருந்தார்.

நேற்று முன்தினம் அவரையும், வீட்டு உரிமையாளரின் மனைவி ரேஷ்மா என்பவரையும் கண்ணூர் போலீசார் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்ணூர், பினராயில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் வெடிகுண்டுகளும் வீசப்பட்டன. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அவர்களை கண்டதும் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் வீடு மீது 2 வெடி குண்டுகள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெடிகுண்டு வீசப்பட்ட வீட்டிற்கும், முதல்-மந்திரி பினராயி விஜயன் வசிக்கும் வீட்டிற்கும் இடையே 200 மீட்டர் தூரம் தான் உள்ளது. இதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News