இந்தியா
நொறுங்கி கிடக்கும் வேன்-டிப்பர் லாரி.

சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் உள்பட 3 பேர் விபத்தில் பலி

Published On 2022-02-15 16:16 IST   |   Update On 2022-02-15 16:16:00 IST
மலப்பரம்பு- வெங்கலம் புறவழி சாலையில் இன்று அதிகாலையில் வேன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பக்தர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி மாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டது.

13-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருகிறார்கள்.

17-ந்தேதி வரை கோவிலுக்கு பக்தர்கள் செல்லலாம் என்பதால் கர்நாடகா ஐய்யப்ப பக்தர்கள் சிலர் ஒரு வேனில் சபரிமலை சென்றனர்.

இவர்கள் சென்ற வேன் இன்று அதிகாலை மலப்பரம்பு- வெங்கலம் புறவழி சாலையில் வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது.

இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News