இந்தியா
ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்ட காஷ்மீர் மாணவிக்கு கொலை மிரட்டல்
ஹிஜாப் அணிவது அல்லது அணியாதது ஒருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது என பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த காஷ்மீர் மாணவி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரை சேர்ந்தவர் அரூசா பர்வேஸ். பிளஸ்-2 படித்து வந்தார். காஷ்மீ ரில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியானது. இதில் அரூசா பர்வேஸ் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருந்தார்.
இதையடுத்து அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர் ஹிஜாப் அணியவில்லை. அவர் ஹிஜாப் அணியாமல் புகைப்படம் வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஒருவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள், சிறுமிகள் ஹிஜாப்புக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் காஷ்மீரில் நமது சகோதரி முகத்தை ஹிஜாப் கொண்டு மறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை நாம் அனுமதிக்க முடியாது.
அடுத்த முறை அவர் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டால் அவரது தலையை வெட்டுவோம்” என்று கூறியுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிரட்டல்கள் தொடர்பாக அரூசா பர்வேஸ் கூறுகையில், “ஹிஜாப் அணிவது அல்லது அணியாதது ஒருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது. அவர்கள் டுவிட்டரில் செய்யும் விமர்சனங்களை விட அல்லாவை நான் அதிகம் நேசிக்கிறேன். நான் இதயத்தால் ஒரு முஸ்லிம். ஹிஜாப் மூலம் அல்ல” என்றார்.