செய்திகள்
அனில் கன்வத்

இந்த சட்டம் வந்தால் இந்தியா நெருக்கடியை சந்திக்கும் -உச்ச நீதிமன்ற குழு உறுப்பினர் எச்சரிக்கை

Published On 2021-11-22 15:28 GMT   |   Update On 2021-11-22 15:28 GMT
வேளாண் வருவாயை பெருக்குவதற்கு அரசாங்கமும் விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும் என நிபுணர் குழு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்தபிறகும், விவசாயிகள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை. அத்துடன் கூடுதல் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக, குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கு, சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த விஷயத்தில் அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. 

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே பல கட்டங்களாக நீடித்த பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில், பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்ல நான்கு பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது. 

அந்த அமைப்பில் இடம்பெற்ற அனில் கன்வத் இதுபற்றி கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டால் இந்தியா நெருக்கடியை சந்திக்கும் என்றார்.

‘வேளாண் வருவாயை பெருக்குவதற்கு அரசாங்கமும் விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு தீர்வு அல்ல. இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும், இருப்பு வைக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என கன்வத் தெரிவித்தார்.
Tags:    

Similar News