செய்திகள்
கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு தளர்வு: குதிரை பந்தயத்திற்கு அனுமதி
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கை திரும்பப் பெற்றுள்ளது கர்நாடக மாநில அரசு.
கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை காரணமாக பல்வேறு மாநிலங்கள், ஊரடங்கை அமல்படுத்தின. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் சப்ளை செய்யப்பட்டதன் காரணமாக, மிகப்பெரிய அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மேலும், மாநிலங்களின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகவும் 2-வது அலை கட்டுக்குள் வந்தது. இதனால் மாநிலங்கள் கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு, இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை பிறப்பித்திருந்த இரவு நேர ஊரடங்கை தற்போது தளர்த்தியுள்ளது.
மேலும், குதிரை பந்தயத்திற்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் வழிகாட்டு நெறிமுறையை முறையாக கையாண்டு பந்தயம் நடத்தப்பட வேண்டும். குதிரை பந்தயத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர்கள் வர வாய்ப்புள்ளதால், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.