செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.2,427 கோடி விடுவிப்பு
தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ.2,427 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறை விடுவித்துள்ளது. இதன்படி 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ.2,427 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்திற்கான பங்காக ரூ.2,67.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்படும் முதல் தொகை ஆகும். இந்த நிதியானது குடிநீர், சுகாதாரம், மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக செலவிடப்பட உள்ளது.
அத்துடன், தொகை வரப்பெற்ற 10 நாட்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த தொகையை மாற்ற வேண்டும், இல்லையெனில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வட்டியுடன் தொகையை விடுவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.