செய்திகள்
ராஜ் குந்த்ரா

ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-08-19 01:47 GMT   |   Update On 2021-08-19 01:47 GMT
2020-ம் ஆண்டு ஆபாச படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதாக மும்பை சைபர் பிரிவு போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழக்குமாறு ஐகோர்ட்டில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார்.
மும்பை :

மாடல் அழகிகளை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மொபைல் ஆப் மூலமாக வெளியிட்ட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.

தற்போது சிறையில் இருக்கும் அவர் முன்னதாக 2020-ம் ஆண்டு ஆபாச படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதாக மும்பை சைபர் பிரிவு போலீசார் பதிவு செய்த மற்றொரு வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழக்குமாறு ஐகோர்ட்டில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் அவர், சைபர் போலீசார் பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே தனக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கவேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.கே.ஷிண்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிஜக்தா ஷிண்டே, “இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவின் பங்கு மற்ற குற்றவாளிகளில் இருந்து வேறுபட்டது. இது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதனை ஏற்று கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதி, ராஜ் குந்த்ராவின் முன்ஜாமீன் மனு குறித்து வரும் 25-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் அதுவரை இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

Similar News