செய்திகள்
தேசிய கைத்தறி தின விழா- கைத்தறி இயந்திரத்தை இயக்கிய ஜவுளித்துறை மந்திரி
கைத்தறி ஏற்றுமதியை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியாக உயர்த்தும் இலக்குடன் செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
புதுடெல்லி:
ஏழாவது தேசிய கைத்தறி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெற்ற விழாவில், கைத்தறி இயந்திரத்தை மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், 'எனது கைத்தறி, எனது பெருமை' என்ற யோசனையை 2015 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி வழங்கியதாகவும், கைத்தறித் துறையை அடுத்த நிலைக்கு வளர்ச்சி பெறச்செய்வதற்கான யோசனைகளை கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.
#WATCH | Delhi: Union Textiles Minister Piyush Goyal operating a handloom machine during an event celebrating the 7th National Handloom Day organised by the Ministry of Textiles. pic.twitter.com/DS52rEYnX2
— ANI (@ANI) August 7, 2021
இப்போது ஆண்டுக்கு ரூ.60000 கோடிக்கு கைத்தறி உற்பத்தி இருந்தும், ஏற்றுமதியானது ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி என்ற அளவில்தான் உள்ளது. ஏற்றுமதியை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியாகவும், உற்பத்தியை ரூ.1.25 லட்சம் கோடியாகவும் உயர்த்தும் இலக்குடன் செயல்படுவோம் என்றும் பியூஷ் கோயல் கூறினார்.
கைத்தறி துறையை சர்வதேச அளவில் ஊக்குவிக்க ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், இது கைத்தறி உற்பத்தியை இரட்டிப்பாக்குவதுடன், ஏற்றுமதியை நான்கு மடங்கு அதிகரிக்க உதவும் என்றார்.