செய்திகள்
ரவிசங்கர் பிரசாத்

மத்திய தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் கணக்கை ஒரு மணி நேரம் முடக்கிய டுவிட்டர்

Published On 2021-06-25 17:31 IST   |   Update On 2021-06-25 17:31:00 IST
இந்திய அரசுக்கும் டுவிட்டருக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், மத்திய அமைச்சரின் கணக்கை முடக்கியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அரசின் புதிய டிஜிட்டல் சட்ட விதிகளை கடைபிடிப்பதில் டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று சுமார் ஒரு மணி நேரம் இந்திய தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தால் டுவிட்டர் கணக்கை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்ட விதிகளை பின்பற்றாததால் எனது டுவிட்டர் கணக்கு சில மணி நேரங்களுக்கு முடக்கப்பட்டது. எனினும் பின்னர் மீண்டும் இயங்கத் தொடங்கியது’’ எனத் தெரிவித்தார்.

மேலும் முன்னறிவிப்பின்றி தனது கணக்கு முடக்கப்பட்டது சட்டவிரோதமானது என குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் சட்ட விதிகளை ஏற்காததால் டுவிட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சட்ட உதவிகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News