பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது தவறு- 61 சதவீத மக்கள் கருத்து
புதுடெல்லி:
நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மக்கள் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள் என்பதை அறிய ''ஏ.பி.பி.-சி-வோட்டர்'' நிறுவனங்கள் இணைந்து கருத்து கணிப்பு நடத்தி உள்ளன.
5 மாநில தேர்தல் பிரசாரம், கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது, புதிய பாராளுமன்ற கட்டிடம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவிக்கொண்டிருந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது தவறு என்று நகரப் பகுதிகளில் 58 சதவீத மக்களும், கிராமப்பகுதிகளில் 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த தேர்தல்களை முற்றிலும் தள்ளிவைத்து இருக்கலாம் என்று 60 சதவீதம் பேர் கூறினார்கள்.
மேலும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளாவை நடத்தி இருக்கக் கூடாது என்று பெரும்பாலான மக்கள் தெரிவித்தனர். அதாவது நகரப்பகுதிகளில் 58 சதவீதம் பேரும், கிராமப்பகுதிகளில் 54 சதவீதம் பேரும் இந்த கருத்தை கூறினார்கள்.
கொரோனா தடுப்பூசிகளை பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு அனுப்பியது சரியா? தவறா? என்று கேட்கப்பட்டதற்கு, இது தவறான நடவடிக்கை என்று நகரங்களில் 54 சதவீதம் பேரும், கிராமங்களில் 45 சதவீதம் பேரும் கருத்து கூறினார்கள்.