செய்திகள்
கோப்புப்படம்

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சோமாலியா படை வீரர்கள் 13 பேர் பலி

Published On 2020-10-16 00:58 GMT   |   Update On 2020-10-16 00:58 GMT
தலைநகர் மொகாதிசுவில் அல்சபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் நிலை குலைந்துபோன சோமாலியா படைவீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
மொகாதிசு:

சோமாலியா நாட்டில் அல் சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அங்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை அகற்றிவிட்டு மத அடிப்படையிலான அரசை அமைப்பதற்காக இவர்கள் 2008-ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.

இவர்கள் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தலைநகர் மொகாதிசுவின் வடமேற்கில் உள்ள அப்கோய் மாவட்டத்துக்கு அருகே காட்டிலும், பண்ணைகளிலும் அல்சபாப் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் கடும் தாக்குதல்களை நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் நிலை குலைந்துபோன சோமாலியா படைவீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.

எதிர் தாக்குதலில் அல் சபாப் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி மேஜர் முகமது அலி தெரிவித்தார்.

இதற்கிடையே அல் சபாப் பயங்கரவாதிகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்தியாசிஸ் அபு முசாப் கூறுகையில், “நாங்கள் 24 படைவீரர்களை கொன்று விட்டோம். மற்றவர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர்” என குறிப்பிட்டார்.

சோமாலியாவில் தாக்குதல்கள் நடைபெறுகிறபோது உயிரிழப்புகளைப் பொறுத்தமட்டில் சோமாலியா அரசும், பயங்கரவாதிகளும் மாறுபட்ட புள்ளி விவரங்களை கூறுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News