செய்திகள்
கோப்புப்படம்

130 கி.மீ. வேகத்தில் செல்லும் ரெயில்களில் ஏ.சி. அல்லாத பெட்டிகள் கிடையாது - ரெயில்வே அமைச்சகம் தகவல்

Published On 2020-10-11 19:40 GMT   |   Update On 2020-10-11 19:40 GMT
130 கி.மீ. வேகத்தில் செல்லும் ரெயில்களில் குளிர்சாதன வசதி (ஏ.சி.) இல்லாத பெட்டிகள் அனைத்தும் விரைவில் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படும் என மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்திய ரெயில்வேயில் 130 கி.மீ. வேகத்தில் செல்லும் ரெயில்களில் குளிர்சாதன வசதி (ஏ.சி.) இல்லாத பெட்டிகள் அனைத்தும் விரைவில் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படும் என மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டி.ஜே. நரேன் இதனை தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

எல்லா ரெயில்களிலும் ஏ.சி. இல்லாத பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படும் என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. தற்போது, பெரும்பாலான வழித்தடங்களில் அதிகபட்ச வேகம் 110 கி.மீட்டராக இருந்து வருகிறது. சிறப்பு ரெயில்களான ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரெயில்கள் மட்டுமே 120 கி.மீ. வேகத்துக்கு இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் சில ரெயில்கள் 130 கி.மீ. அல்லது அதற்கு மேல் வேகமாக இயக்குவதற்கு தகுதி வாய்ந்தவை. அப்படி 130 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரெயில்களுக்கு ஏ.சி பெட்டிகள் அவசியமானவை. டிக்கெட் கட்டணம் பயன்படுத்தத்தக்க வகையில் இருக்கும்.

ரெயில்வே துறையை அதிவேகமாக்கும் திட்டத்தில் இந்திய ரெயில்வே செயல்பட்டு வருகிறது. 110 கி.மீட்டருக்கு குறைவான வேகத்தில் இயங்கும் ரெயில்களில் ஏ.சி இல்லாத பெட்டிகள் இருக்கும். ஏ.சி பெட்டியாக மாற்றப்படும் ரெயில் கட்டணம் பயணிகளுக்கு ஏற்றவகையில் குறைந்த அளவில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News