செய்திகள்
சாலையில் தேங்கிய மழைநீர்

மும்பையில் விடிய விடிய கனமழை- மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு, ரெயில்கள் ரத்து

Published On 2020-09-23 03:47 GMT   |   Update On 2020-09-23 03:47 GMT
மும்பையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மும்பை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. 

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மும்பையின் கோரேகான், கிங்ஸ் சர்கில் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்கிரி, ஜொஜேஷ்வரி, கோரிஹன், மலட், போரிவாலி உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

ரெயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், சர்ச்கேட்-அந்தேரி வழித்தடத்தில் புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விரார்-அந்தேரி புறநகர் ரெயில், நீண்ட தூர சிறப்பு ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News