செய்திகள்
போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை

போதைப்பொருள் விவகாரத்தில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது: போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை

Published On 2020-09-12 03:00 GMT   |   Update On 2020-09-12 03:00 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் முக்கிய தகவல் கிடைத்திருப்பதாக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போதைப்பொருள் விவகாரத்தில் தினமும் ஒரு பெயர் அடிபடுகிறது. இந்த பிரச்சினை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கில் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மிகப்பெரிய அளவில் பண பரிமாற்றம் நடந்துள்ளது மேலோட்டமாக தெரியவருகிறது. இதனால் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இதை தற்போது பகிரங்கப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் யாராக இருந்தாலும், அத்தகையவர்களை கைது செய்து சட்டப்படி விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். எந்த ஆதாரத்தில் இருந்து போதைப்பொருள் குறித்து தகவல் வந்தாலும் அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். போலீசாருக்கு உரிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை யாரையும் கைது செய்ய மாட்டார்கள். எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் பேச்சுக்கே இடமில்லை. போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

Similar News